ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்பிய நிலையில் படகு இதுவரை இல்லை

ந.குகதர்சன்

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சென்றவர்கள் மூவர் மாத்திரம் திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பருக்கு சொந்தமானIMULA 0039MTR  எனும் இலக்கமுடைய மஞ்சள் நிற அலீயா என பெயர் இடப்பட்ட மீன்பிடி இயந்திர படகுடன், வாழைச்சேனை மற்றும் பிறைந்துறையைச் சேர்ந்த மூன்று மீனவ தொழிலாளர்களுடன் வாரத்துக்கு தரித்து மீன் பிடிக்க கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்கு சென்றனர்.

ஆனால் கடந்த 09ம் திகதி அதிகாலையில் படகின் இயந்திர கோலாறு காரணமாகவும், அவ்வேளை நிலவிய கடல் கொந்தழிப்பினாலும் ஊர் செல்வதற்கு வருகை தந்த ஒரு படகின் உதவியுடன் படகினை எடுத்து வர முயற்சித்தும் பயனளிக்காமையினால் மீனவ தொழிலாளர்கள் மூவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டு வாழைச்சேனைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் மீன்பிடி இயந்திர படகும், அதன் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களும் கடல் நீர் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன், இதனை தேடும் பணியில் ஈடுபட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பில் படகு உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே குறித்த படகினை யாரும் மீனவர்கள் கண்டு கொண்டால் உடனடியாக படகின் உரிமையாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பவரின் 0770556385 அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 0652257709 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறு வாழைச்சேனை பொலிஸார் வேண்டுகோள் விடுத்தார்.