அம்பாரை மாவட்ட மட்ட கபடி விளையாட்டு போட்டிகள்
இரண்டு அணிகள் தேசிய கபடி போட்டிக்கு தகுதி
தேசிய கபடி விளையாட்டுப் போட்டிக்கான அணிகளை தெரிவு செய்யும் அம்பாரை மாவட்ட மட்ட கபடி விளையாட்டுப் போட்டியானது திருக்கோவில் பிரதேசத்தில் உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று இருந்தன.
இவ் விளையாட்டுப் போட்டியானது திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று இருந்தன.
இவ் மாவட்ட மட்ட கபடி விளையாட்டுப் போட்டியானது இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சின் ஊடாக 33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா முன்னிட்டு இடம்பெற்று இருந்தன.
அம்பாரை மாவட்ட மட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி கல்முனை வடக்கு நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேளை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த நான்கு ஆண்கள் அணியும் நான்கு பெண்கள் அணியுமாக இப் போட்டியில் எட்டு அணிகள் பங்கு பற்றி இருந்தன.
அந்தவகையில் பெண்கள் அணியில் முதலாம் இடத்தினை நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டு இருந்ததுடன் ஆண்கள் பிரிவில் நித்தவூர் பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும் இரண்டாம் இடத்தினை அட்டாளைச்சேனையும் பெற்றுக் கொண்டு இருந்தன.
இதேவேளை அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்ற நாவிதன்வெளி பிரதேச செயலக பெண்கள் அணிகளும் நித்தவூர் பிரதேச செயலக ஆண்கள் அணியும் தேசிய ரீதியாக நடைபெறவுள்ள கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் மாவட்ட மட்ட கபடிப் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் தமயந்தி கங்கா சாகரியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக்கலி நிஷ்கோ முகாமையாளர் சிரிவர்த்தன மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நடுவர்கள் பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.