நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.

(க.கிஷாந்தன்)

நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படக்கூடும். உலகளவில் இன்று பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இங்கும் அந்நிலைமை ஏற்படலாம். கப்பல் கட்டணம் நூற்றுக்கு 300 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போர் காலத்தில் பொருளாதாரம் சரிந்தது. போர் முடிந்த பின்னர் 2015 ஆகும்வரை சிறந்த வளர்ச்சி மட்டத்தில் நாம் இருந்தோம். அடுத்த வருட இறுதியாகும்வரை முன்னேற்றம் ஏற்படலாம்.

யுகதனவி விவகாரத்தில் அரசியல், பொருளாதாரம் என இரு பக்கங்கள் உள்ளன. அவை தொடர்பில் புரிந்துணர்வு இல்லாமல் சிலர் கதைக்கின்றனர். யுகதனவி தொடர்பில் அரசு எடுத்துள்ள முடிவு சரியானது” – என்றார்.