காஷ்மீர் கறுப்பு தினம்  ஐ.நா. காரியாலய முன்றலில் போராடிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு!

(நூருல் ஹுதா உமர்)முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கஸ்மீர் கருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னால் புதன்கிழமை (27) பதாதைகளை ஏந்திக்கொண்டு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமான மற்ற முறையில் நடத்துவதையும் இவர்கள் தமது பதாதைகளில் சுட்டிக் காட்டியிருந்தனர். ஜக்கிய நாடுகள் சபையும் ஜ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்க்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும்  கடமைப்பட்டுள்ளது  எனக்குறிப்பிட்டனர்.