தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ரவூப் ஹக்கீமை சந்தித்தனர்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றை பிரநிதிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் நேற்று  (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் சந்தித்து, பிரஸ்தாப நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இம் மூன்று நிறுவனங்களின் சொத்துக்கள் அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தொழிற்சங்கத்தினர் தங்களது அதிருப்திகளை வெளியிட்டனர். அத்துடன், இப்பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புமாறு கேட்டுக்கொண்டதுடன், மகஜர் ஒன்றையும் ரவூப் ஹக்கீமிடம் கையளித்தனர்.
ஐக்கிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற் சங்க கூட்டமைப்பு, தேசிய தொழிற் சங்கம் மற்றும் சுயேச்சையான தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன. கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.