கொரோனாவினால் மரணிக்கும் உடலங்கள் பனிரெண்டாயிரம் அல்ல ஆயிரம் உடலங்கள்தான் அடக்கம் செய்ய முடியும்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் இன்னும் ஆயிரம் உடல்கள்தான் நல்லடக்கம் செய்ய முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

ஏற்கனவே நல்லடக்கம் செய்யப்பட்டு வந்த ஐந்து ஏக்கர் காணியில் ஜனாஸா நல்லடக்கம் முடிவுற்ற நிலையில் நாங்கள் கோரிப் பெற்றுக் கொண்ட மேலதிகமான இரண்டு ஏக்கர் காணியில் நல்லடக்கப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான உண்மை நிலை அடிப்படை நிலை தெரியாமல் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இன்னும் 12000 உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் சொல்வது போன்று அங்கு 12000 உடல்களை இன்னும் அடக்குவதென்றால் அங்கு குடியிருக்கும் மக்களை துரத்திவிட்டா நல்லடக்கம் செய்வது என்ற கேள்வியை நான் அவரிடம் முன்வைக்கின்றேன்.

ஏற்கனவே ஏழு ஏக்கர் காணிகளை அங்கு குடியிருந்து விவசாயம் செய்த நபர்கள் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்ய தியாகத்துக்கு மத்தியில் அந்தக் காணிகளை விட்டுக் கொடுத்துள்ளனர்.

மேலும்மேலும் அந்த மக்களின் மனம் புண்படும் வகையில் அவர்களது காணிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக நாங்கள் பறித்து இந்த நடவடிகையை செய்வோமானால் இந்த ஜனாஸா நல்லடக்கம் செய்யும் விடயம் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு மக்களோடு முரண்பட்டுக் கொள்ள முடியாது என்பதற்காவே நாங்கள் மாற்று இடம் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து அது கிண்ணியாவில் கிடைத்துள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் அடக்கப் பணிகள் முடிந்ததும் கிண்ணியாவில் ஜனாஸா நல்லடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்படுவுள்ளது.

எனவே தனிப்பட்ட கோபதாபங்கள் அரசியல் இலாபங்களுக்காக நீங்கள் பிழையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். என்று நான் வினயமாக வேண்டிக்கொள்கிறேன் என்று தவிசாளர் தெரிவித்தார்.