அன்புவழிபுரத்தில் வயது முதிர்ந்த குடும்பம் ஒன்றுக்கு வீடு வழங்கி வைப்பு.!

(ஹஸ்பர் ஏ ஹலீம் )
சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலை அன்புவழிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (11) காலை திறந்து வைக்கப்பட்டது.
இவ்வீட்டினை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் P. தனேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்ததுடன் அத்துடன் ஐயாயிரம் பெறுமதியான உலருணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சிதைவுற்ற வீடொன்றில் வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகளுக்கே இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டிற்கான நிதியினை வார வழிபாட்டு மன்ற சக்தியான சுவிற்சர்லாந்து இராசன் வழங்கியுள்ளார்.
இவ்வீடு சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் நிறுவுனர் சக்தி  சுவிஸ் சுரேஸ் சகோதரரின் நேரடி கண்காணிப்பிலும், மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி  ச.திருச்செந்தூரனின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.