மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிரான் – கோரகல்லிமடு பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயிலவெட்டுவான் வீரக்கட்டாற்றின் நடுவிலுள்ள மணல் திட்டியில் மணல் அகழ்ந்து வள்ளத்தில்ஏற்றிவிட்டு கரையிலுள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் உதவியுடன் கரைதிரும்பும்போது அந்த ஆற்றின் மிகஆழமான பகுதியில் கைகள் விறைத்ததையடுத்து நீரில் மூழ்கியுள்ளார்.

சிலமணிநேரத்தில் மீட்கப்பட்டவர் மூச்சையிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
கரடியனாறு பொலிஸ் சார்ஜன்ட் ஏஎம்ஏ. நதீர் வாக்குமூலங்களை நெறிப்படுத்தினார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் உடல்கூறு பரிசோதனை மற்றும் பீசீஆர் பரிசோதனையும் நடைபெற்றன.