அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் கூட்டம்.

(மாளிகைக்காடு நிருபர்) நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது தீவிரமாய் பரவி வரும் நிலையில், அதனை அக்கரைபற்று பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் முனைப்புடனான பிரதேச மட்ட கோவிட் 19 செயலணியின் குழுக்கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைபற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி , அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.ரஸான், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயர் அதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச மக்களின் அன்றாட அடிப்படை அத்தியாவசிய சேவைகளை மக்களின் காலடிக்கு நடமாடும் வாகன சேவைகள் ஊடாக உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், இவ்விடயங்கள் சீராக நடைபெறுவதை கண்காணிக்க குழுக்கள் நியமித்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேச சுகாதாரப் பிரிவில் அண்மைகாலத்தில் ஒரு சில கோவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள சூழலில், இத்தொற்றின் பரவலை தவிர்க்கும் முகமாக தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து இங்கு ஆராயப்பட்டது. அத்தியாவசிய தேவைகள், தகுந்த காரணங்கள் இன்றி வீணான முறையில் பிரதேசத்தின் சுகாதார பாதுகாப்பு ஒழுங்கில் கரிசனை செலுத்தாது உலாவித் திரியும் இளைஞர்கள், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நலனை கருத்திற் கொண்டு சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.