மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி பிரச்சினையை தீர்க்க பிரதமரால் 14 மில்லியன் ஒதுக்கீடு ; ஹரீஸ் நடவடிக்கை !!

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி கடலரிப்பினால் முற்றாக பாதிக்கப்பட்டு ஜனாஸாக்கள் வெளிவருவதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வை பெற்றுத்தர அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் உருவாக்கப்பட்ட சமூக சேவகர்களை கொண்ட செயற்பாட்டு குழு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. அதனடிப்படையில் இவ்விடயம் தொடர்பில் நேரடியாக கள விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தெளிவை பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த பிரச்சினையின் அவசர நிலையை விளக்கியதன் பலனாக உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பிரச்சினையை தீர்த்து கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கரையோரம் பேனல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக கள விஜயம் செய்த கரையோரம் பேனல் திணைக்கள அதிகாரிகள் இப்பிரச்சினையின் சாதக பாதக நிலைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பித்தத்திற்கு இணங்க இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கேள்வி மனு கோரப்பட்டு விட்டதாகவும் விரைவில் வேலைகள் ஆரம்பம் செய்யப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.