“இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா

நாடளாவிய நிருவாக சேவைகள் மற்றும் இணைந்த சேவைத் தேர்வில் உச்ச மதிப்பெண்களை எய்தும் வகையிலும், அரச சேவையில் இணைந்துகொண்ட பணியாளர்கள் வினைத்திறன் போட்டி பரீட்சையினை இலகுவாக வெற்றி கொள்ளும் வகையிலும், இலங்கை அரச அலுவலக நிருவாக நடவடிக்கை தொடர்பாக 2020 ஆம் ஆண்டு வரை தாபனங்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் சுற்றறிக்கை மாற்றங்களை இற்றைப்படுத்தி இலங்கை நிருவாக வரலாற்றில் முதன் முறையாக “இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” எனும் நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.

இலங்கையின் நிருவாக சேவையின் விசேட தரத்தில் அறிவு திறன் ஆற்றல் அனுபவ முதிர்ச்சி பெற்ற மூத்த வளப் பேராளர் கலாநிதி. திரு. எஸ். அமலநாதனினால் உருவாக்கப்பட்ட இந் நூல் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நூலாசிரியர் அமலநாதன், அலுவலக நிருவகிப்புத் தொடர்பாக தேசிய மட்டம் வரை பல உற்பத்தித்திறன் விருதுகளை வென்றவர். பல்கலைக்கழகங்கள் முதலான தாபனங்களின் வளவாளராகவும் மற்றும் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்வேறு நூல்களையும் உருவாக்கியுள்ளார். இவர் நிருவகிப்புத் தொடர்பாக 34 இற்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று நிருவாக அறிவூட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” எனும் நூலானது 12 அத்தியாயங்களின் கீழ் 113 உப தலைப்புக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆசிரியர் அடையாளப்படுத்தியுள்ள வினாக்கள் அவரது அனுபவம் சார்ந்த எதிர்வு கூறல்களாக இருக்கும். இந் நூலைக் கொண்டு பரீட்சாத்திகள் மட்டுமன்றி அலுவலக பணியாளர்கள் தமது சந்தேகங்களை தீர்த்து கொள்வதோடு அலுவலக நிருவாகம், நிதிக் கையாள்கை, பெறுகை நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளையும் முறையாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந் நூல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அலுவலக பணியாளர்களுக்கு மட்டுமின்றி ஒப்பந்தகாரர், அலுவலக நிருவாகத்தை கற்றுக்கொள்ளும் பல்கலைகழக மாணவர்கள், அரச அலுவலகங்களை அணுகுவோருக்கும் இந் நூல் மிகப் பயனுடையதாக இருக்கும். இந் நூலானது ஏ5 அளவிலும் 500 பக்கங்களை கொண்டதுமாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்