ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையானுக்கு  பிணை

(வவுணதீவு எஸ்.சதீஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வளக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு செவ்வாய்கிழமை 24ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு  செவ்வாய்க்கிழமை (24)மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர் பிணையில் விடுதலை செய்யப்படதுடன் வழக்குடன் சம்பந்தப்படட ஏனைய ஐவரும் தலா இரு சரீரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இவ் வழக்கு மீண்டும்  டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.