கிழக்கில் பொலிசாரும் படையினரும் ஆர்வத்துடன் தபால்மூல வாக்களிப்பு

(ரீ.எல்.ஜவ்பர்கான்-பாறுக் ஷிஹான்)

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம்திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் இன்று  பொலிசாரும் முப்படையினரும்; ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்திலும் படை முகாம்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக்கவசம் அணந்து சமுக இடைவெளி பேணப்பட்டு தபால் மூல வாக்களிப்பை வழங்கினர்.

தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு பொலிசாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.இதேவேளை

வியாழக்கிழமை(16) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம், சவளக்கடை பொலிஸ் நிலையம்  ,மத்திய முகாம் பொலிஸ் நிலையம், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை மற்றும்  கல்முனை இராணுவ முகாம் உள்ளிட்ட  இடங்களில்  பணியாற்றும்   உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதேவேளை

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு   நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் 7920 க்கும் அதிகமான  வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16,17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரை வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்தள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.