“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” சம்மாந்துறை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் கையளிப்பு

ஐ.எல்.எம் நாஸிம்   
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை  பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு  வீடுகளும்  இன்று (25) வைபவ ரீதியாக சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளின்  பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ் இரு வீடுகளும்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  மானிய நிதியுதவியின் கீழ்   தலா  ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா  செலவில்  பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு  நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடு சம்மாந்துறை மலையடிகிராமம் 1, சம்மாந்துறை சென்னல் கிராமம் 2 ஆகிய  பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட  எம்.எல். சித்தி நபீசா,எம்.எல் வெள்ளம்மா என்ற பயனாளிகளுக்கு  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில்  நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் 51 வீடுகளில் இரண்டு வீடுகள் இன்று கையளிப்பட்டுள்ளதாக,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை  அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க  இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட  முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள்  எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.