கொரோனா தொற்று சந்தேகம்: யாழ். வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நேற்றுத் தெரிவித்த வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி அவர்களின் குருதி மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன, அதன் முடிவுகள் எந்நேரமும் எதிர்பார்க்கப்படுகின்றனஎனவும் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் கடந்த மாதம் 2 ஆம் திகதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு வரை 53 பேர் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

ஏனைய 44 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதணைகளின் முடிவின்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் நேற்று முன்தினம் புதன் கிழமை வைத்திய சாலைக்கு வந்த 6 பேருடைய பரிசோதனை முடிவு அறிக்கை நேற்று வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றது.

அந்த பரிசோதனை முடிவின்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் 8 பேர் சந்தேகத்தின் அடிப்படை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுடைய இரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக னுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேருடைய பரிசோதனை முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை கிடைக்கப்பெறும்என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்