வீடுகளுக்கே மருத்துவசேவை : மகிழடித்தீவு வைத்தியசாலையின் அர்ப்பணிப்பான சேவை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலை மருத்துவசேவையினை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் செயற்பாட்டினை இன்று(31) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவச்சேவையினை மக்களுக்கு வழங்கும் பொருட்டு இந்நடமாடும், வைத்தியசேவையை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வைத்தியசாலையின் தொலைபேசி மருத்துவ ஆலோசனை நிலையத்தின் ஊடாக இச்சேவை வழங்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை ஆலோசனையின் பின் அவர்களுக்கான மருந்துகளும் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகின்றன.

மேலும், இவ்வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்ட கிளினிக்நோயாளர்களுக்கும், அவர்களுக்கு தேவையான ஆலோசனையும், மருந்துப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.