மட்டக்களப்பு லேடிமெனிங் வீதியில் மரக்கறி விற்பனை

ஊரடங்குச் சட்டம் நாளை வியாழக்கிழமை (26) காலை 6.00 மணிக்கு தளர்த்தி மீண்டும் 12.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் கால இடைவெளியில் பொதுமக்கள் அன்றாட மரக்கறிகளை லேடிமெனிங் வீதியை அண்டிய பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் இன்று (25) துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு வாவியின் அருகாக மாநகர பொதுச் சந்தை வளாகத்தின் அருகிலிருந்து லேடி மனிங் வீதியை அண்டிய பிரதேசத்தில் வியாபாரிகள் தங்கள் மரக்கறிகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம். இச்செயற்பாடானது பொதுமக்கள் நெருக்கமாக கூடுவதை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணிப்போர் செல்லும் வழியில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதோடு கொள்வனவு செய்வதற்கு முன்பாக சவர்க்காரம் அல்லது தொற்று நீக்கியினால் கைகளை கழுவுவதற்கான வசதிகளும் அவ்விடத்தில் செய்யப்பட்டுள்ளது.

மீன்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை வழமையாக உள்ளது போல் சந்தையின் மேல் வளாகத்தில் வாங்குவதோடு ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்யலாம் அதற்காக இன்று (25) மாநகரசபை வளாகம் முற்றாக கழுவப்பட்டு கிருமிநாசினி தெளித்து தொற்றுக்கள் நீக்கப்பட்டன.

எனவே பொதுமக்கள் மாநகர சகாதாரப் பிரிவினர், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரின் வேண்டுகோழ்களை ஏற்று எல்லோருக்குமுரிய சமூகக் கடமையை செய்வதோடு கொவிட் 19 உலக தொற்றுநோயைத் தடுப்பதற்கான தங்களது பங்களிப்பைச் செய்யுமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.

இந்நிகழ்வில் மாநகரமுதல்வர் தி.சரவணபவன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்கள், கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. மிதுன்ராஜ், தீயணைப்புப் படை அதிகாரி எஸ். பிரதீபன், சுகாதார பகுதி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.