பட்டதாரிகளை ஏமாற்ற வேண்டாம்

 

(கதிரவன் திருகோணமலை.)அரசு பட்டதாரிகளுக்க சம்பளம் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றக் கூடாது. உண்மையில் அவர்களுக்கு சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு மார்ச் முதல் சம்பளம் வழங்கப்படும் என சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பந்துல குணவர்த்தண ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அரச ஊழியர்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி சம்பளம் வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் இதன் போது பட்டதாரிகளின் சம்பளம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப் படவில்லை.

தற்போது ஜனாதிபதி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மார்ச் மாதம் முதல் பட்டதாரிகளுக்குரிய சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முடியும் நிலை உள்ளது. எனினும் இதுவரை பட்டதாரிகளிடம் அவர்களது வங்கிக் கணக்கிலக்கம் பெறப்பட வில்லை.

உண்மையில் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்திருந்தால் அவர்கள் பிரதேச செயலகங்களில் அறிக்கையிடும் போது வங்கிக் கணக்கிலத்தைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஊரடங்கு சட்டம் அமுலாவதற்கு முன்னர் இருந்த காலப்பகுதியிலாவது வங்கிக் கணக்கிலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஏனைய அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தினத்தில் இவர்களுக்கும் சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க இப்போது எப்படி வங்கிக் கணக்கிலக்கம் ஊடாக சம்பளம் வழங்க முடியும்?

அரச ஊழியர் ஒருவர் தினமும் எப்படி கடமைக்கு வந்து வரவுப் புத்தகத்தில் ஒப்பமிட வேண்டும். எப்படி கடமை செய்ய வேண்டும். லீவு என்றால் எப்படிப் பெறவேண்டும். எத்தனை நாட்கள் லீவு உண்டு என்றெல்லாம் சட்டதிட்டங்கள் உண்டு.

இவை தொடர்பான எந்த அறிவித்தலும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர்களுக்கு சம்பளம் வழங்கமுடியுமா? ஏன்ற சட்டப் பிரச்சினை உள்ளது. அப்படி சம்பளம் வழங்கினாலும் சம்பளம் வழங்கிய அதிகாரிகள் கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளுக்கு முகங்கொடுங்க வேண்டிய நிலையும் உள்ளது. இது தான் உண்மைநிலை.

எனவே அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றக்கூடாது. அவர்களுக்கு சம்பளம் வழங்கும் உண்மையான எண்ணம் இருந்தால் அது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். அடிக்கடி அறிக்கைகளை மாத்திரம் விடாது தாமதமின்றி அதனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.