கூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றும். கி.துரைராசசிங்கம்

மக்கள் சகோதரவாஞ்சையுடன் எம்மை விமர்சித்தாலும் அவர்களின் அபிமானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தான் என்றும் இருக்கும்…

ஜனாதிபதி அவர்களுக்கான வாய்ப்பைப் பார்க்கின்றாரே தவிர மக்கள் பீதியின்றி தேர்தலை எதிர்கொள்ளும் நிலையுள்ளதா என சிந்திக்கவில்லை…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

மக்கள் எங்களைச் சகோதரவாஞ்சையோடு விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். ; ஏனெனில் சகோதரனாக இருப்பவனுடன் தான் குறைகளைச் சொல்ல முடியும் என்று எங்களை அவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களது அபிமானம் எங்களோடுதான் எப்போதும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் என்பது மிகவும் ஜனநாயகப் பண்போடு நடக்கப்பட வேண்டிய ஒரு விடயம். இலங்கையில் தற்போது கொரோணா வைரஸின் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையான இந்த சூழ்நிலையில் சரியான முறையிலே இந்த ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைபெறப் போகின்றதா என்பதிலே சந்தேகம் இருக்கின்றது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்ற வேளையில் ஜனாதிபதி அவசரப்பட்டுத்தான் பாராளுமன்றத்தைக் கலைத்திருக்கின்றார். ஏனெனில் பாராளுமன்றம் கலைக்கப்படும் போதே கொரோணா வைரஸ் தொடர்பான விடயம் உலக நாடுகளிலே இருந்தது. இது தொடர்பில் இலங்கைக்கும் எச்சரிக்கை இருந்திருந்தது.

ஜனநாயக முறையில் இந்தத் தேர்தலை நடத்துவதற்குச் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம். சர்வதேச கண்காணிப்பாளர்கள் வரக்கூடிய நாடுகளில் எல்லாம் கொரோணா வைரஸின் அச்சம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஏன் பாராளுமன்றத்தை அவசரமாகக் கலைத்தார். புதிதாக பாராளுமன்றத்துக்குச் சென்ற 69 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஐந்து ஆண்டுகளை முடிக்காத ஒரு நிலையில் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு தற்போது அவருக்கிருக்கின்ற அதியுச்ச ஏகபோக அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் இந்தப் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்திருக்கின்றார்.

தற்போதைய நிலையில் வேட்பாளர்கள் எவ்வாறு மக்கள் முன் செல்வது. மக்களைத் திரளாகச் சந்திப்பது, பரப்புரை செய்வதென்பது அறியாத நிலையில் கட்டாயமாகத் தேர்தலை நடத்துவேன் என ஜனாதிபதி ஒற்றைக்காலிலே நிற்கின்றார். அவர் இந்த விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தேர்தலை ஒத்தி வைத்தாலும், பாராளுமன்றம் இல்லாத நாடாக இது இருக்க முடியாது. எனவே பாராளுமன்றத்தைத் திரும்பவும் கூட்டுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

தற்போது தங்களுக்குச் சாதகமாக வாய்ப்பு வந்துவிட்டது என்பதற்காக மட்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஜனாதிபதி கொள்ள வேண்டாம். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள பிளவினை வாய்ப்பாக எண்ணி அதனை மட்டும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கூடாது. ஜனநாயகப் பாங்கிலே மக்கள் எந்தவிதப் பீதியும் இன்றி தங்களின் விருப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு நிலைமைகள் இருக்க வேட்புமனுத் தாக்கல் தினம் நாளையுடன் முடிவடையும் தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எனும் சட்டபூர்வமான நாமத்தின் கீழ் இன்று வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.

மக்கள் எங்களைச் சகோதரவாஞ்சையோடு விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். சகோதரவாஞ்சை என்பது இங்கு மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் ஏனெனில் சகோதரனாக இருப்பவனுடன் தான் குறைகளைச் சொல்ல முடியும் என்று எங்களை அவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களது அபிமானம் எங்களோடுதான் எப்போதும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தற்போது இருக்கின்ற சூழ்நிலையிலே வழமையாக மூன்று ஆசனங்களைக் கைப்பற்றுகின்ற கூட்டமைப்பு இம்முறை நான்கு ஆசனங்களைக் கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புத்திஜீவிகள் என்ற பெயரில் இருந்து கொண்டு தனியாக மட்டக்களப்பை மாத்திரம் யோசித்துக் கொண்டு, உயர்பதவிகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் என்கின்ற விடயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேறொரு சிந்தனையிலும், இங்கு அபிவிருத்திக்கு மாத்திரம் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேண்டும் என்ற வகையிலும் சிலர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான ஒரு விடயம் இந்த மாவட்டத்திலே இருந்து அதியுச்சமாக நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தான் பெற முடியும். அவர்கள் தமிழ் மக்களுடைய குரலைச் சொல்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர. உங்களின் பதவியுயர்வு, இடமாற்றம் போன்ற சிறு சிறு விடயங்களைச் சொல்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. இவ்வாறான விடயங்களையயும் நாங்கள் செய்யக் கூடியவர்களாக இருப்போம். இலங்கையின் அரசியல் வரலாற்றின் அடிப்படையில் தமிழர்களுக்கென்று இருக்கின்ற அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் என்ற வகையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் தங்கள் ஆதரவினை வழங்குவார்கள். புத்திஜீவிகள் என்ற அடிப்படையில் அதீதமான கற்பனை அடிப்படையில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை விடுத்து மக்களை ஜனநாயக முறையில் வாக்களிப்பதற்கு இடமளியுங்கள். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே நிச்சயம் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.