கருணா குழுவிற்குப் புத்துயிர் கொடுக்க அம்பாறையில் முயற்சி – கோடீஸ்வரன்

கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்குப் புத்துயிர் கொடுக்கவே என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பாராளு மன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இவ் வருடத்திற்கான ஆரம்ப மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சில பேரினவாத சக்திகளின் கைக்கூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. இவர்களின் திட்டம் எமது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்து எமது மக்களை நிர்க்கதியான சூழ்நிலைக்குத் தள்ளுவதே தவிர வேறு ஏது திட்டங்கள் இல்லை.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும் போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றவர் 10 வருடங்கள் கடந்த பின்னர் தற்போது அபிவிருத்தி செய்வதாகப் புழுகு கதைகளைக் கூறி ஏமாற்றி வருகிறார்.

முன்னாள் கருணாகுழுவோடு இயங்கியவர்களைத் தேடிப்பிடித்துப் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவர்களின் வேலைத்திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டமாகவே நான் பார்க்கின்றேன்.

கடந்த காலங்களிலே பல கடத்தல்களையும், கொள்ளைகளையும், கொலைகளையும் செய்த நபர்கள் உள்வாங்கி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு குழப்பகர மான சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றார். இப்படியான குழுக்கள் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதைத் தடுக்கவேண்டிய கட்டாயப்பாட்டில் இந்த அரசு இருக்கின்றது. அந்த வகையிலே இந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது.

இவ்வாறான நபர்கள் வெவ்வேறு வகைகளில் மாயாஜால வித்தை காட்டி அம்பாறை மாவட்டத்தில் உள்நுழையப் பார்க்கின்றனர். இவர்களுக்குத் தகுந்த பாடத்தைத் தமிழ் மக்கள் புகட்ட வேண்டும். கடந்த ஒக்டோபர் புரட்சியின் போது பல கோடிகள் தருவதாக என்னிடம் பல பேரம் பேசப்பட்டது.

ஆனாலும் எங்களது மக்களுக்காக, எமது மண்ணைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும், எமது மக்கள் கொடுத்த உத்தரவாதத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த கேவலமான செயலுக்கு நான் துணைபோகவில்லை. நாங்கள் நினைத்திருந்தால் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சுப் பதவியைப் பெற்றிருக்கலாம் எமது மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டோம் எனத் தெரிவித்தார்.