பிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை !!

கல்முனை மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் இன்று மருதமுனையிலும் ஒரு கையெழுத்து வேட்டை போராட்டம் ஆரம்பமானது.

மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (26) ஜும்மாஹ் தொழுகையை தொடர்ந்து மருதமுனை மக்களினால் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மருதமுனையில் உள்ள சகல ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலும் இடம்பெற்ற இந்த கையெழுத்து வேட்டையில் பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளியிட்டனர்.
சில தினங்களுக்கு முன்னர் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களை சந்தித்து முஸ்லிங்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரிடம் மருதமுனை- நற்பட்டிமுனை மக்களின் தேவையாக இருக்கும் இந்த செயலகத்தை உருவாக்க அமைச்சர் வஜிர அபேவர்த்தன உடன்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர,மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மகஜர் லையளிக்கப்பட உள்ளது.
(நூருள் ஹுதா உமர்)