கல்முனையில் சாகும்வரை உண்ணாவிரதம் : இளைஞர்களின் ஆதரவுடன் இரவிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் !!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று காலை 10.30 மணிமுதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார்அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் இன்று காலை தெரிவித்திருந்த போராட்டக்காரர்களை சந்திக்க இதுவரை (இரவு 10.28).எந்த அரசியல்வாதிகளும் வருகைதரவில்லை என கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர் சா.சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். மேலும் எம்மை சந்தித்து பேச அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் சிலர் வருகைதந்ததாகவும் தெரிவித்தார்.
பிரதமரும்,ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள். எங்களுடைய இந்த தேவையை அறிந்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவையும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் அவர்களையும் அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். நாங்கள் இங்கு இனவாத,பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல்,நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்கால போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்ற கோசத்தோடு போராடிவரும் இவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் அவர்களின் உடல்நிலையில் ஏட்பட்ட மாற்றத்தின் காரணமாக கல்முனை வடக்கு வைத்தியசாலையினால் சிகிச்சை வழங்கப்பட்டு தொடர்ந்தும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதிகளவிலான இளைஞர்கள் போராட்ட களத்தில் இவர்களுக்கு ஆதரவாக குழுமியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.