மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனியில் வைத்திருந்த ஆசிரியர் கைதாகி விடுதலை

பாறுக் ஷிஹான்
 பயங்கரவாதி மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (18) அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் குறித்த கணனியை சோதனை மேற்கொண்ட நிலையில் அதிலிருந்து அண்மையில் இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன்அக்கணனியை பாவித்தவரின்  வட்சப் சமூக வலைத்தளத்திலும் குறித்த புகைப்படங்கள் காணப்பட்டதை அடுத்து அவ்வீட்டில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பாடசாலை ஆசிரியரான முஹமட் இஸ்மாயில் ஜஹானா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதே வேளை இச்சுற்றிவளைப்பின் போது மற்றுமொரு நபரும் அடையாள அட்டை இன்றி காணப்பட்டமையினால் பொலிஸாரினால் கைதானார்.
இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு கைதாகி அழைத்து செல்லப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியரை நீண்ட நேரம் விசாரித்த பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்று விடுதலை செய்துள்ளனர்.