தயாநிதியை பல்லாக்கில் தூக்கி ஊர்வலம்கொண்டு சென்ற மக்கள்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள அம்பிளாந்துறைக் கிராமத்தினைச்சேர்ந்த, கலாநிதிப்பட்டத்தினை நிறைவு செய்த முருகு.தயாநிதியை பாராட்டி, கௌரவித்து அக்கிராமத்து மக்கள் பல்லாக்கில் தூக்கி ஊர்வலமாக கொண்டு சென்ற நிகழ்வு இன்று(20) சனிக்கிழமை நடைபெற்றது.

தங்கச் சகோதரர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கௌரவிப்பும், பாராட்டு வழங்கும் நிகழ்வில் வரவேற்பு நிகழ்வின் போதே பல்லாக்கில் தூக்கி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதன்போது, கலாநிதி முருகு தயாநிதியினால் எழுதப்பட்ட பழந்தமிழில் கல்விச்சிந்தனை என்ற நூலும் வெளியீடு செய்யப்பட்டது. மேலும் குறித்த அமைப்பினால் தமிழருவி என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
அம்பிளாந்துறைக் கிராமத்தில் கற்று, அங்கே வசித்து முதன்முதலாக அக்கிராமத்தில் கலாநிதி பட்டத்தினைப்பெற்றவர் என்ற பெருமையினைப் பாராட்டியே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இதன்போது பல்வேறு அமைப்புக்களும், தனிநபர்களும் பாராட்டி நினைவுச்சின்னங்களையும், பொன்னாடைகளையும் போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடாதிபதி மு.ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், விரிவுரையாளர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.