மட்டு.பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ; உருவபொம்மையும் எரிப்பு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கெதிராக  கிரான் பிரதேசத்தில் கண்டன ஆர்பாட்டம் இன்று திங்கள் கிழமை(11.03.2019) காலை நடைபெற்றது.

கிரான் இளைஞர்களினால் இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினை சட்ட வரையறைகளை  மீறி பாராளுமன்ற உறுப்பினர் தமது அதிகாரத்தினை பயன்படுத்தி 2 கூலித் தொழிலாளர்களை கூண்டில் அடைத்துள்ளார். .எவ்வளவு அபிவிருத்தி வேலைகள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி விட்டு கூலியாளர்களை கூண்டில் அடைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தே இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரான் சுற்று வளைவு மையத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் பாதாதைகள் சிலவற்றினை கையில் ஏந்தியவாறும் பாராளுமன்ற உறுப்பினரது உருவம் தாங்கிய பொம்மையினை தூக்கிக் கொண்டு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக கிரான் சுற்று வளைவு மையத்தினை சுற்றி வந்தனர்.

‘தமிழரசு கட்சியே ஏழைகளை சிறையில் வைப்பதா.” “இது உங்களது அரசியல் வங்குரோத்தா”. “எழுவது நாம் வீழ்வது நீர்”.”தமிழர்கள் என்ன மடையர்களா” என்பன போன்ற வாசகங்களை உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

கண்டனப் பேரணியின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினரது பெயர் குறிக்கப்பட்ட உருவப் பொம்மை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டாக்காரர்களால்  எரியூட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை தொடர்ப்பு கொண்டு கேட்ட போது “கடந்த வாரம் பிரதேசத்தின் மண் அகழும் குழுவினர்  வயல் ஒன்றுக்குள் சென்று மண் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வயல் பள்ளமாக்கப்பட்டுள்ளதுடன் வயல் காணி பாதிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர்  இச் செயற்பாட்டினை புகைப்படம் எடுத்து வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் குறித்த நபர் மீது வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாதிக்கப்பட்டவர் தமக்கு ஏற்பட்ட அவலத்தையும் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தம்மிடம் பல தடவைகள் முறையிட்டார். குறித்த விடயம் உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவும் உறவுகளுடன் தொடர்பானதாகவும் இருப்பது பற்றி சிந்தித்தேன்.

மீண்டும் மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டதால் பிரதேசத்தின் ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு குறித்த பிணக்கினை சுமுகமான முறையில் தீர்த்து வைக்குமாறு கேட்டிருந்தேன். அதன் பின்னர் பொலிசார் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்ததாக அறிந்தேன்.

இதன் பின்னர் சிலர் இச் செயற்பாட்டினை அரசியல் பிரச்சினையாக மாற்ற முனைகின்றனர். அதன் வெளிப்பாடகவே சிறு எண்ணிக்கையானவர்களை கொண்டு குறித்த ஆர்பாட்டம் தமக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் என்பதுவும் குறிப்பிடதக்கது.