‘அதிகாரிகள் மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது’

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் அதிகாரிகள் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவதை விடுத்து, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து விவசாயிகள், பிரதேச மக்கள் ஒத்துழைப்புடன் இருந்தால்தான் அவற்றைத் தடுக்க முடியு​​மென்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மாவட்டத்தில் திணைக்களங்களூடாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் வெளிப்படைத்தன்மையாக மாவட்டத் திட்டமிடல் பிரிவின் ஊடாக நடைபெறவேண்டுமென்றும், கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் கடன் பெறுகிறார்களென்றால் அதற்கு கமநல அமைப்புகளிடமும் தவறுகள் இருக்கின்றனவென்றும்,  படித்தவர்கள் அதிகம் பேர் பங்குபெறும் அமைப்பாக இருந்துகொண்டு, வங்கிகளில் மாத்திரம் குற்றம் சுமத்துவது சரியல்ல என்று கூறினார்.

அத்தோடு, விவசாயிகளது பிரச்சினைகள், விவசாயக் கூட்டங்களில் மாத்திரம் பேசப்படுகின்றவையாக இருக்கின்றன. அவ்வாறான கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் கலந்துகொள்பவர்கள் மூலம் அடிமட்டம் வரையில் கொண்டு செல்லப்படுகிறதா என்பது கேள்விக்குறியென்பதால், அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.