ஆளுனர் பதவியேற்புக்காக ஆதரவாளர்கள் பயணித்த வேன் மோதுண்டதில் தெருவில் நடமாடிய மாடுகள் பலி

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான்  பிரதேசத்தில் வேன் மோதுண்டதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்தாhக தியாவட்டவான் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த  ஆதரவாளர்கள் பயணித்த வேன் திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தெருவில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் மீது மோதியதிலேயே 5 மாடுகள் மாண்டு போயின.

வேனின் முன் பக்கம் நொருங்கியுள்ளதுடன்,  விபத்தில் சிக்கிய 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.