நெடுஞ்சேனை ஆற்றுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, நெடுஞ்சேனை ஆற்றுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்தை வெள்ளிக்கிழமை மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது, ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு 12 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, ஒரு இலட்சத்து 5 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா உட்பட 6 பரல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்குப் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று விசேட அதிரடிப்படையினர் நெடுஞ்சேனை ஆற்றுப் பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.