அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு

அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து தொழில் செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து தமது வேலைகளை செய்யவேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் ஏப்ரல் 20 திங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திங்களன்று திறக்கப்படவுள்ளன.

பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்களுக்கு முடியுமானளவு தொலைக்கல்வி வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.