அச்சத்தை ஏற்படுத்தும் மணற்பிட்டி வீதி – குளுவினமடு வீதி போக்குவரத்து

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மணற்பிட்டி – குளுவினமடு வீதி உடைந்து அபாய நிலையில் காணப்படுவதை செப்பனிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மணற்பிட்டி ஆற்றின் ஓரத்தில் அணைக்கட்டின் மீதே இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியில் ஓரத்தினை நீர் உடைத்துள்ளமையினால் வீதியின் ஒருபகுதி உடைந்துள்ளது.

குறித்த வீதி கிறவல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றில் நீர்தேங்கி நிற்கும் போது அல்லது மழைகாலங்களில் இன்னும் அதிகம் உடைவதற்கும் வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியின் ஊடாக உழவுஇயந்திரம், அறுவடை இயந்திரம், டிப்பர், லொறி போன்ற வாகனங்களும் போக்குவரத்து செய்கின்றன. இதனால் இவ்வீதியின் ஊடாக போக்குவரத்து செய்கின்ற போது அச்சத்தில் மத்தியிலேயே செல்லவேண்டியுள்ளது. எனவே நீர்கசிவு ஏற்பட்டு வீதி உடைப்பெடுத்து, முற்றாக போக்குவரத்து தடைப்படும் நிலையை உருவாக்காமலிருக்க உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.