தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்யாது தீர்வினை வழங்க வேண்டும் – சஜித்தை வலியுறுத்துகிறார் ஸ்ரீநேசன்

தமிழர்களது அரசியல் பிரச்சினையை வைத்து அரசியல் மேற்கொள்ளாது அதற்கான உரிய தீர்வினை முன்வைக்க அமைச்சர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் தலைமைத்துவத்தை அமைச்சர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமிழர் விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது  வடக்கு கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்தித்த நிலையில், எதிர்வரும் காலங்களில் யுத்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை முன்னேற்றவும் கலாசார நிலையங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை உருவாக்கவும் சஜித் பிரேமதாச நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழரின் இனப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தி வந்தனரே தவிர இப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவில்லை எனத் தெரிவித்த ஸ்ரீநேசன், சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.