மட்டக்களப்பில் பொலிஸ் நிலையங்களில் 24 மணி நேர அவசர அம்பியூலன்ஸ் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் சேவையாக 24 மணி நேர அவசர அம்பியூலன்ஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

வீதிப் போக்குவரத்து, மின்சாரம், தீ,  நீரில் மூழ்குதல், நஞ்சு, போன்றவற்றால் ஏற்படக் கூடிய விபத்துச் சம்பவங்களின்போது பொது மக்களுக்கு உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணிநேர அவசர உதவு அம்பியூலன்ஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வாகரை, வாழைச்சேனை, கரடியனாறு, ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய 8 பொலிஸ் நிலையங்களில் மக்களின் அவசர சேவைக்காக இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

விபத்துச் சேவைகளுக்காக உதவி தேவைப்படும் பொதுமக்கள் 1990 என்ற சேவை இலக்கத்தினூடாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாகவோ தொடர்பு கொண்டு அவசர உதவு அம்பியூலன்ஸ் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்,

விபத்துச் சேவைகளுக்கு மேலதிகமாக திடீரென ஆபத்தான  நோய்கள் ஏற்படும்பொழுதும் இந்த அவசர அம்பியூலன்ஸ் சேவையை நாட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.