மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205 ஆவது ஆண்டுவிழா இன்று சனிக்கிழமை(29) கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் காலை 8.00 மணியளவில்  தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியானது வில்லியம் அடிகளாரின் ஆசீர்வாதத்தால் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இன்றுடன் 204ஆண்டுகளை பூர்த்தி செய்து 205ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது என்றால் அடிகளாரின் தூய,தூரநோக்குடைய எண்ணமாகும்.

இக்கல்லூரியில் படித்தவர்கள் உயர் பதவியில் அலங்கரிப்பது வில்லியம் ஓல்ட் அடிகளாரின் ஆசீர்வாதம் ஆகும்.இக்கல்லூரியில் படித்தவர்கள் இன்று சர்வதேச நாடுகளில் “மெதடிஸ்த மத்திய கல்லூரி” எனும் நாமம் கொண்டு வாழ்கின்றார்கள்.

இக்கல்லூரி பெருமைமிக்க பல பண்பான மனிதர்களையும்,புத்திஜீவிகளையும் இம்மண்ணிலே ஈன்றெடுத்துள்ளது.இதனால் கல்லூரி பல சவால்களுடன் தேசிய பாடசாலைகளுடன் போட்டிபோட்டு கல்வியில் சாதனை படைத்து வருகின்றது.ஒவ்வொரு வருடமும் கல்லூரிதினம் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்நிகழ்வு முதலில் புளியந்தீவு மெதடிஸ்த சபையில் வழிபாட்டு ஆராதனையுடன் இறைவனுக்கு ஆசீர்வாதம் செலுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் உள்ள வில்லியம் ஓல்ட் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு ஜே.டவூல்யூ.யோகராசா,கல்லூரியின் பிரதியதிபர் எஸ்.சதீஸ்வரன்,பழைய மாணவர்சங்கத்தின் முன்னாள் தலைவரும்,கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமான  எஸ்.சசிதரன்,பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.தர்சன் மற்றும் ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள்,கல்லூரியின் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.