எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். கல்முனையில் கருணா.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஏகாதிபத்திய போக்கை அடக்க வேண்டுமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன்போது தீர்வினை வழங்க அவர் முன்வந்தார். எனினும், பல முஸ்லிம் அரசியல் தலைவர்களே அதனை தடுத்தி நிறுத்தினர்.

கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லையெனில் இலங்கை நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்

ஆதவன்