நுவரெலியாவில் ஐ.எஸ். பயிற்சி முகாம் இருவர் கைது

(க.கிஷாந்தன்)

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் 06.05.2019 அன்று சுற்றி வளைத்துள்ளனர்

அம்பாறை கல்முனை  சாய்ந்தமருது பிரதேத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதனையடுத்து, அவர் தெரிவித்த வாக்குமூல அடிப்படையிலேயே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

சஹாரான் உட்பட 38 பேர் வரையில் டி 56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சி சஹாரான் தலைமையில் இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன், குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடம் குத்தகைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்த நுவரெலியா பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பீ.பி.சுகதபால, நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க, இராணுவத்தின் பிரதானி அசித்த ரணதிலக்க ஆகியோரின் தலைமையின் கீழான குழு மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.