மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக களுதாவளையச் சேர்ந்த திரு.வே.மயில்வாகனம் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்..

கடமையை பொறுப்பேற்கும் போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மன்சூர், ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.மனோகரன், மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.நவனீதன் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..

களுதாவளையைச் சேர்ந்த திரு. வே. மயில்வாகனம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை களுதாவளை மகா வித்தியாலயத்திலும் க.பொ.த.உயர்தரத்தை சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கல்விபயின்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது விஞ்ஞான பட்டதாரிகளிலொருவராவார். அதன் பின்னர் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தை கல்முனை கல்வி வலயத்தில் பெற்றுகொண்ட இவர் கல்முனைப் பிராந்தியத்தில் பல
விஞ்ஞான பட்டதாரிகளை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார்,அதேநேரத்தில் தனது சொந்த கிராமமமான களுதாவளையில் விஞ்ஞான பிரிவை உருவாக்கும் நோக்குடன் 1997 இல் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இருந்து உயிரியல் ஆசிரியையான தனது துணைவியாரையும் அழைத்துக்கொண்டு களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று இங்கு க.பொ.த உயர் தரப் பிரிவை ஆரம்பித்து அரும்பாடுபட்டு இன்று களுதாவளையில் பல விஞ்ஞான பட்டதாரிகள் உருவாவதற்கு காரணமாக அமைந்தார். இதே காலப் பகுதியில் அதாவது 1999 இல் கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து பட்டிருப்பு கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவிகளை வகித்தார், பின்னர் வடகிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் 4 1/2 வருடம் திட்டமிடல் பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், மீண்டும் பட்டிருப்பு கல்வி வலயம், கல்முனைக் கல்வி வலயம் ஆகியவற்றில் பிரதிக் கல்விப் பணிப்பாளர், பதவியினை வகித்தார், 2013/01/01 முதல் தரம் ஒன்று அதிகாரியாக நியமனம் பெற்ற இவர் எந்த அரசியல் வாதிகளின் பின்புலம் இல்லாததன் விளைவால் பல தடவைகள் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியை இழந்து வந்தார், இருந்தாலும் அவருடை திறைமைக்கு கிடைத்த பதவியே மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் பதவியாகும், கிழக்கின் ஒரு கேந்திர நிலையமாகவும், அதிகமான சிறந்த பாடசாலை கொண்ட இக் கல்வி வலயத்தில் இவரது இறுதிக்காலத்தில் சேவையாற்றக் கிடைத்தது களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையாரின் அருள் எனக் கூறும் இவர், களுதாவளை கிராமத்தின் ஒரு பொதுச் சேவையாளராகவும் விளங்குகின்றார். களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் நீண்டகால உறுப்பினராகவும், பிள்ளையார் ஆலயத்தில் பரிபாலன சபை உறுப்பினராகவும், செயற்பட்டதோடு, களுதாவளை விபுலானந்தா கல்வி நிலையம் அமைப்பதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்குவதில் அரும்பாடுபட்டது மட்டும் அல்லாது தற்போதும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விபுலானந்தா பொதுப்பணி இயக்கத்தின் காணியானது இவரால் இலவசமாக இவ் அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு தானும் தனது துணைவியாரும் கல்விப் பணிக்கு ஆற்றிய சேவையின் பலனால் கடவுளின் ஆசீர்வாதத்துடன் அவருடைய வாரிசுகள் ஒழுக்கத்திலும் கல்விப் புலத்தில் சிறந்து விளங்குகின்றனர். இதில் ஒரு புதல்வர் மாவட்ட மட்டத்தில் மருத்துவ பீடத்தில் முதல் நிலை பெற்றதோடு அகில இலங்கை ரீதியில் 12 ஆம் இடத்தைப் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி பயின்று வருகின்றார். இவ்வாறு விஞ்ஞானத்துறைக்கு பல்வேறு சேவையாற்றிய இவர் தன்னுடைய காலத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தை விருத்திசெய்வார் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை…