“இரண்டு சமூகங்களும், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தால், உண்மையான குற்றவாளியைக் கைது செய்வதற்க்கான வழிவகைகள், கை நழுவிப்போகலாம். அவற்றை கை விடும்படி, இரு சமூகங்களைச் சார்ந்தவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், தோப்பூர் பெருவெளி கிராம பாடசாலைக்குச் சென்ற மூன்று சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிராக முன்னெடுக்கபட்டு வரும் போராட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், நேற்று (7) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“குற்றத்தைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். விசேடமாக, பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு இட்டிருக்கிறோம். அவற்றுக்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. ஒரு தனி நபர் செய்த குற்றத்துக்காக, ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களை விமர்சிப்பது, இனமுறுகலை ஏற்படுத்தும்.
பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திப் போராட்டங்களை நடாத்துவது, பெற்றார்களே தமது பிள்ளைகளின் கல்வியைச் சீர்குலைக்கின்ற செயற்பாடாகும். அத்தோடு திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்துக்கு, மட்டக்களப்பு மற்றும் ஏனைய பகுதிகளில் போராட்டங்களை நடாத்துவது, பொருத்தமற்ற செயல். அவற்றினூடாக, இனவன்முறைகளை ஏற்படுத்தும் ஒரு முறையாகவே தெரிகிறது” என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்கார, வன்புணர்வு செய்த பகுதியில் இருந்த எடுக்கப்பட்ட சந்தேகநபரின் மரபணு மீதான பரிசோதனை அறிக்கை, எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற்றதும், உண்மையான குற்றவாளி யார் என்பதை இனங்கண்டு, அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும். குறிப்பாக இரு சமூகத்தைச் சார்ந்தவர்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.