வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சங்காபிஷேக நிகழ்வும் “மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
108 சங்காபிஷேக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் முன்னிலையில் காலை 9.00 மணி முதல் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதேவேளை, வரலாற்று பாரம்பரியத்துடன் கூடிய மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கான முதல் வரலாற்று நூலான “மரகதம்” நூல் வெளியீட்டு விழா ஆலய சந்நிதானத்தில் காலை 11 மணிக்கு ஆலய பரிபாலன சபையின் தலைவர் கலாநிதி கி.ஜெயசிறில் தலைமையில்நடைபெற உள்ளது.
ஆலய பரிபாலன சபை ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள்
அழைக்கப்பட்டுள்ளார்.
முதன்மை அதிதியாக ஜனாதிபதி செயலணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேத.ஜெகதீசன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொள்வார்கள்.
மேலும் கௌரவ, நட்சத்திர அதிதிகளும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அவ்வமயம் சகல மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அழைக்கிறோம் என ஆலய செயலாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.
அன்றைய தினம் சங்காபிஷேக நிகழ்வு நிறைவு பெற்றதும் அன்னதானம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதிகள் பெறுவோர் கலந்துகொண்டு ஆலய வளர்ச்சிக்கு உதவுமாறு அனைவரையும் அழைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.