ஹஸ்பர் ஏ ஹலீம் –
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன். சர்வதேச மகளிர் தின மாவட்ட கொண்டாட்டம் இன்று (13) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை “பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் “அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்” என்பதாகும்.
பெண்கள் எவ்வாறு கௌரவிக்கப்பட வேண்டும் அவர்களுடைய ஆற்றல் மற்றும் திறமைகள் என்னவென்ற விடயங்களை இந்நிகழ்வின் போது தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது திருகோணமலை மாவட்ட பெண்கள், சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் சார்பாக அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும் கோரிக்கையினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களிடம் கையளித்தனர்.
இதன்போது பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கலை, கலாசார நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரல, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,
மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி , மொறவெவ உதவி பிரதேச செயலாளர் சத்யபிரியா, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, துறைசார் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மாதர் சங்க உறுப்பினர்கள்,கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் அசாட் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



