கிழக்கில் இந்துநாகரிகத்துறையின் முதற்பேராசிரியரானார் கலாநிதி சாந்தி கேசவன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவியுயர்வு 2022 நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கில் இந்துநாகரிகத்துறையின் முதற்பேராசிரியரானார்  என்ற பெருமையினை இவர் ஈட்டியுள்ளார்.

மட்டக்களப்பினை பிறப்பிடமாகக்கொண்ட இவர் மட்/  புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் பழைய மாணவி என்பதுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்துக்கொண்டதுடன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப்பட்டத்தினையும், பேரதெனியா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன்கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்பித்தல் வான்மைவிருத்தி கற்றலையும் மேற்கொண்டுள்ளார்.

ஆசிரியராக, சேவைக்கால பயிற்சி ஆலோசகராக, தேசியகல்வி நிறுவகத்தின் கல்விமானி கற்கை நெறியின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பொறுப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர், இந்து நாகரீகத்துறை கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.

பல நூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ள இவர், தேசிய, சர்வதேச மாநாடுகளிலும் பங்கு பற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த துறையின் தலைவராக இருதடவை பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரிடம் கற்ற மாணவர்கள் விரிவுரையாளர்களவும், துறைத்தலைவர்களாகவும், பீடாதிபதிகளாகவும் பதவி வகிக்கின்றமை எடுத்துக்காட்டத்தக்கது.

பணியில் பயனுற வாழ்க நீடு
—————வில்லூர்ப் பாரதி—–

சாந்த முள்ள பெண்ணிவளோ
      சர்வ தேசம் அறிந்தவரே
ஏந்து மிந்து நாகரீகம்
      எவரும் அறியப் போதித்தே
பந்த முள்ள மாணவர்கள்
      பாதை காணச் செய்தின்று
சொந்த மான துறையதிலே
      சூடும் பட்டம் பெற்றுயர்ந்தார்

இந்து நாக ரீகமதனில்
      இயன்ற வரையில் சேவைசெய்தே
மந்த  மாகும் பண்பாட்டை
      மட்டில் உயரச் செய்துநல்ல
உந்து தலையிங் கேற்படுத்தி
      உழைத்த நல்ல சேவையினால்
வந்து நல்ல உயர்விங்கே
      வாய்த்த நாளில் வாழ்த்துகிறேன்

சாந்தி கேச வனென்பாரோ
      சற்றும் களையாச் சேவையினி
காந்தம் போலும் பல்கலையில்
      காலை வைத்தார் உயர்ந்திடவே
நீந்தும் கடலில் கரைகாண
      நின்றே யுழைத்து நீடுவாழ
ஏந்து முயிராம் தமிழாழே
      என்றன் வாழ்த்தை இங்குரைத்தேன்