– புதிய பரீட்சை நடைபெறும் திகதி
விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற, 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் (2024) விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதியை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதி வினாத்தாளை இரத்து செய்து, மீண்டும் அப்பரீட்சைக்கான பகுதியை நடத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் குறித்த பரீட்சை நடத்தப்படவுள்ளதுடன், அது தொடர்பான திகதி பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள், பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்திகளுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாக்கள் வெளியான சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன