கவிஞர் குறிஞ்சிவாணன் அவர்களின் நினைவுப்பேருரை அஞ்சலி நிகழ்வு.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)    அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பணியாற்றி அமரத்துவம் அடைந்த மலையக மண்ணிணை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் குறிஞ்சிவாணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவுப் பேருரையும் அஞ்சலி நிகழ்வும் அம்பாரை மாவட்ட திருவதிகை கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இவ் நினைவுப் பேருரை அஞ்சலி நிகழ்வானது அம்பாரை மாவட்ட ஏ.எஸ்.கே.திருவதிகை கலைக்கூடத்தின் உப தலைவர் இலக்கிய செயற்பாட்டாளர் எஸ்.பி.நாதன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்று இருந்தன.

இதன்போது அமரர் கவிஞர் குறிஞ்சிவாணனின் திருவுருவப்படத்திற்கு அவரது மகள் தமிழ்செல்வி அவர்களினால் மாலை அணிக்கப்பட்டதோடு இந்து மதகுருமார்கள் மற்றும் அம்பாரை மாவட்ட ஏ.எஸ்.கே.திருவதிகை கலைக்கூடத்தின் கலைஞர்கள் இலக்கிய செயற்பாட்டாளர்கள் தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தியதோடு அவரைப் பற்றிய நினைவுப் பேருரைகளையும் சிரேஷட கவிஞர்களால் நிகழ்த்தப்பட்டு இருந்தன.

அமரர் கவிஞர் குறிஞ்சி வாணன் அவர்கள் 1945ஆண்டு பதுளை தேமோதரை எனும் இடத்தில் பிறந்த சி.வி.பி.மாணிக்கம் எனும் இவர் 1963ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிக்கையில் வெற்றிநமதே எனும் கன்னிக் கவிதையுடன் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இவர் 1968ல் தானே கல்லச்சு இயந்திரம் ஒன்றினை தயாரித்து ‘மலைக்கீதம்’ ‘தேனிசை’ எனும் இசைப் பாடல் தொகுதிகளையும் வெளியிட்டு இருந்ததோடு சுமாராக 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்று பின்னர் திருக்கோவில் பிரதேசம் சாகாமம் கிராமத்தில் குடியேரி தமது இறுதி காலம் வரை திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்து பிரதேச இலக்கிய வளர்ச்சிக்காக குறிஞ்சிவாணன் எனும் புனைப் பெயருடன் மிக காத்திரமான மூன்று கவிதை நூல்களை வெளியிட்டு இந்ததோடு இவர் 2019ஆம் தனது 74வது வயதில் அமரத்துவம் அடைந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய செயற்பாட்டார்கள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.