கல்முனை நகரை அழகுபடுத்துவது தொடர்பில் நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

தனியார் துறையினரின் பங்களிப்புடன் கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாநகர சபையில் நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையிலான பிரதான வீதியை அழகுபடுத்தி, பசுமைமிக்க நகரங்களாக மாற்றியமைப்பதற்கான உத்தேச திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடபட்டது.

கல்முனை வாசல் உட்பட மாநகரில் உள்ள முக்கிய சந்திகளை அபிவிருத்தி செய்து, பேணிப் பாதுகாப்பது தொடர்பிலும் பிரதான வீதியில் இருந்து தொடங்கும் உள்ளூர் வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை அமைப்பது, பூஞ்செடிகள் மற்றும் நிழல்தரும் மரங்களை நடுதல், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் குறித்து மாநகர ஆணையாளரால் தெளிவுபடுத்தப்பட்டது.