(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் வர்த்தக இராஜாங்க அமைச்சரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு வின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கிரான் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு, பொருளாதார, விவசாய மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளில் அபிவிருத்தி திட்டங்களின் சம கால நிலைப்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் பிரதேசத்தை அபிவிருத்தி அடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.பிரதேசத்திலுள்ள திணைக்களங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.