வடிவேல் சுரேஷ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான நேற்றைய வாக்கெடுப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், வடிவேல் சுரேஷ் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.இது கட்சியின் தீர்மானங்களுக்கு எதிரானது என தெரிவித்து, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு வருகை தராத சஜித் பிரேமதாஸ, எமது மக்களை புறக்கணித்து பதுளை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிக்கு சென்றார்.அன்றை தினம் மடுல்சீமையில் எமது மக்கள் பணிக்கு செல்லாமல், சஜித்தை வரவேற்க அந்த கூட்டத்துக்கு வருகைதந்தனர். எனினும், அவர்களுக்கு இறதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு பின்னர் மற்றுமொரு நாளில் வந்து மக்களை சந்தித்து வருத்தத்தை தெரிவிக்குமாறு சஜித்திடம் கோரினேன். அதனை புறக்கணித்த அவர் இன்று வரை எந்தவித பகிரங்க மன்னிப்பையும் கோரவில்லை என்றார்.

மக்களை காக்க வைத்து ஏமாற்றிய சஜித் பிரேமதாஸ மீது கட்சி என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது? ஒழுக்காற்று நடவடிக்கை அனைவருக்கும் சமம் என்றால் அத்தகைய பாரிய தவறை புரிந்தவருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக கட்சி ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியிடம் வடிவேல் சுரேஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.