விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு

சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட பனிச்சங்கேனி கண்டத்தில் 16 வாரமாக  நடைபெற்ற நெற் பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.டீ.எம்.நளீர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது அறுவடை மதிப்பீட்டு விழாவும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாயப் போதனாசிரியர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், உதவி விவசாயப் பணிப்பாளர் சமந்த குமார, பாடவிதான உத்தியோகத்தர்களான ஏ.ஜெயிலாப்தீன், ஏ.ஐ.ஏ.பெரோஷ்,மல்வத்தை, நிலையப் பொறுப்பு விவசாயப் போதனாசிரியர் எம்.டி.ஏ.கரீம், நிந்தவூர் நிலையப் பொறுப்பு விவசாயப்போதனாசிரியர் பெளசுல் அமீன், விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாயப்போதனாசிரியர்களான கே.ஆர்.எப்.இம்லா, எம்.எச்.எம்.இர்சாத், டி.ஜானானன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது விவசாயிகளுக்கு இலவசமாக சேதனத் திரவப் பசளைகள்,  சேதனப்பீடைநாசினிகள், கூட்டெரு போன்றன தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருவதுடன், நாட்டின் நெற் பயிர் செய்கையில் அம்பாரை மாவட்டத்தில் அதிக அளவில் நெற் பயிர் செய்கை மேற்க்கொள்ளும் பிரதான இடமாக சம்மாந்துறை பிரதேசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.