அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!

அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒருசில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருந்ததாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் கடன் காப்புறுதி கிடைப்பனவில் தாமதம் ஏற்பட்டதால் தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் குறைந்தபட்சம் 10 பில்லியன் செலவாகும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம்,சுகாதாரம் உட்பட நலன்புரி சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கான நிதியை திரட்டிக் கொள்வது சவாலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.