இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் மீட்கப்பட்ட 105 ரோஹிங்கிய அகதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வழங்கி வைத்தது.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், சுகாதார பொருட்கள் மற்றும் உணவுகள் உள்ளடங்களான ரூபா 19 லட்சம் பெறுமதியான பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் அகதிகள் தற்போது பராமரிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று குறித்த பொருட்களை வழங்கிவைத்தனர்.
யாழ் சிறைச்சாலையில் இருந்து மிரிஹான குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்தபோது நடுக்கடலில் படகு பழுதடைந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, படகில் பயணித்த 105 பேரில் 104 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் படகின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.