காணாமல்போனோரின் உறவினர்களிடம் மட்டக்களப்பில் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை இன்று (புதன்கிழமை) மேற்கொண்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விசாரணையில் கொழும்பிலிருந்தும் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமல்போன உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலலகம் பரிந்துரை செய்யும் எனவும் இதன்போது குறித்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.