போராட்டங்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இரா. சாணக்கியன்!

நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை ஏற்பட்டால், நாட்டின் நிலைமை மிகவும் பாரதூரமாக அமைந்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறை முதல் ஹம்பாந்தோட்டை வரை வாகனப் பேரணியாக எமது இந்தப் பணி இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே பயங்கரவாதியா என கேட்க விரும்புகிறேன்.

அவர் இந்த நாட்டு மக்களுக்காகத்தான் போராடினார். இவர் மட்டுமன்றி, எதிர்க்காலத்தில் பல சிங்கள இளைஞர்களும் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்படுவார்கள்.

இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சிங்கள பிரதிநிதிகள் கூறும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது உண்மையில் மகிழ்ச்சியான விடயமாகும்.

ஆனால், மக்களையும் போராடிய இளைஞர்களையும் பிரிக்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால்தான், போராடிய அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க அரசாங்கம் முற்படுகிறது.

மூன்று வேளை உணவு உண்டுவந்த மக்கள், இன்று வெறும் இரண்டு வேளை உணவைத்தான் உட்கொள்கிறார்கள்.
கடந்த காலங்களில் தேசியக் கொடியையும் பதாதைகளையும் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், எதிர்க்காலத்தில் தங்களின் பிள்ளைகளை கையில் சுமந்துக் கொண்டு, போராட்டத்திற்கு வந்தால் நிலைமை பாரதூரமானதாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

எதிர்க்காலத்தில் இலங்கையர் அனைவரையும் பயங்கரவாதிகளாக சிந்தரிக்க இடமளிக்க வேண்டாம்.- என்றார்.